சனி, ஜூலை 25, 2009

ராஜமார்த்தாண்டனின் மரணம்




திரு. ராஜமார்த்தாண்டன் அவர்களின் மரணச் செய்தியை முதன் முதலில் எங்கே படித்தேன் என்பது ஞாபகமில்லை. ஆனால் அச்செய்தி என் மனதிற்குள்ளும் ஒரு சலனத்தை, உறவு வட்டத்தினுள் மிக நெருக்கமாய் இருந்த ஒருவர திடீரென பிரிந்துவிட்ட இழப்பு தரும் கவலையைத் தந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் தமிழ் நாட்டில் நண்பர் ஒருவரின் வீட்டில் கண்ணில்பட்ட ஒரு "இலக்கிய சிறு பத்திரிகையில்" ராஜமார்த்தாண்டனின் பெயரை முதன்முதலாக பார்த்தேன். அதனைத் தொடர்ந்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தின் விளைவாக, அவர் ஆசிரியராக இருந்த "கொல்லிப்பாவை" யின் அத்தனை இதழ்களையும் முகம் தெரியாத ஈழத்து நண்பருக்கு அனுப்பியிருதார். தமிழின் நவீன இலக்கியத்தின் போக்கினை எனக்கு கொல்லிப்பாவை தான் அறிமுகம் செய்தது என நான் பல முறை நினைத்ததுண்டு. அந்த நினைப்பு வந்தபோதெல்லாம் ராஜமார்த்தாண்டனின் பரோபகாரமும் நினைவுக்கு வந்தது. ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்த பின்பு தமிழ் நாட்டிற்கு ஒரு நாள் போய் வர வேண்டும் என்ற மாறாத கனவில், ராஜமார்த்தாண்டன் அவர்களை நேரில் சந்ததிக்க வேண்டும் என்பதும் ஒரு பகுதி. அது இனிமேல் சாத்தியமில்லை என்று நினைத்தபோது மனதுக்கு நெருக்கமானவர்களின் இழப்பு தரும் வலியின் வேதனையை அனுபவித்தேன். அவருடைய எழுத்துக்களை நான் படிக்காமல் என்றும் தவிர்த்தது இல்லை. ஈழத்தின் இளம் கவிஞர்களின் ஆக்கங்களை அயராமல் தேடிக்கண்டு தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அவருடைய பணியின் வழியில் அவர் எவ்வித பக்க சார்பையோ அனுதாபத்தையோ காட்டவில்லை என்று தான் நான் உணர்ந்துகொண்டேன்.
"காலச்சுவடு" ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள் எழுதிய அஞ்சலியினுடாக ராஜமர்த்தானடனின் இழப்பின் துயரத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

அஞ்சலி
பேரன்பு, அமைதி, உறுதி
கண்ணன்
ஒரு மரணம் சூழலில் எல்லோரையுமே பாதிக்கிறது. ஆனால் பாதிப்புகளின் தன்மை மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ராஜமார்த்தாண்டனின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புகள் பல தளத்திலானவை. என் இரண்டாவது மகன் முகுந்தனுக்கு மார்த்தாண்டன் எப்போதும் அளவற்ற பிரியத்தை வெளிப்படுத்தும் மாமா. பள்ளியில் தொலைந்துபோகும் பென்சில், ரப்பர் ஆகியவற்றைச் சத்தமில்லாமல் பதிலீடு செய்துவிடும் ரகசிய உறவும் உண்டு. சாரங்கனுக்குத் தமிழ் கற்பித்தல், வீட்டுத் தோட்டத்திலிருந்து அவனுக்குப் பிரியமான கொய்யாப்பழம் கொண்டு வருதல் - இருவர் முகங்களிலும் சு.ரா.வை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். ‘காலச்சுவ’டில் பணியாற்றுவோருக்கு ‘சாரின்’ இழப்பு அளப்பரியது. கோபமேபடாமல் பலவற்றையும் கற்றுத்தந்து வழிகாட்ட, பாதுகாக்க ஒரு ஆன்மா. அவர் குழந்தைகளுக்கு எல்லாக் குறைபாடுகளையும் கடந்து மிகுந்த அன்பைப் பொழியும் தந்தை.
....... கட்டுரையை தொடர்ந்து படிக்க அன்பர்கள் கீழ்வரும் தொடுப்பை அழுத்துமாறு வேண்டுகிறேன்.
http://www.kalachuvadu.com/issue-115/page31.asp

கருத்துகள் இல்லை: