புதன், பிப்ரவரி 11, 2009

நான் ஒரு புதினம்......

தற்செயலாய் கண்ணில் பட்ட இக்கவிதை யாழ்ப்பாணத்தின் மத்திய தர வர்க்கத்தின் மனோநிலையை எடுத்துக்காட்டி மனதில் தைத்தது. வன்னியில் தமிழ் மக்களின் அவலத்தில் மனமுடைந்து சோர்ந்திருக்கும் வேளையிலும் ஏதோ ஒரு மின்னலை மனதில் வெட்டிச் செல்கிறது...


நான் ஒரு புதினம்......

என் வீட்டு மாட்டுக்கும்
தன் மானம் பெரிது
கழுநீர் என்றாலும்
தன் வீட்டுத் தண்ணீரே குடிப்பதாய்.....

என் வீட்டு நாய்க்கும்
பண்பு அதிகம்
படலை திறந்தாலும்
பக்கத்து வீட்டுள் நுழைவதில்லையென்று.....

என் வீட்டுத் திண்ணைக்கும்
அத்தனை பெருமிதம்
இன்முகங் காட்டி
இருப்பதைக் கொடுத்து உபசரிப்பதாய்......

என் எழுதுகோலுக்கும்
சற்றே தலைக்கனம்
நல்லதை மட்டுமே
தான் எப்போதும் பேசுவதாய்........

போகுமிடமெல்லாம்
என்னுடன் மிதிபடும்
என் செருப்புக்கும் கூட
கர்வம் அதிகம்
மதியாதார் முற்றம் தானும் மிதிப்பதில்லையென......

என் மனைவிக்கும் கூட
நான் ஒரு புதினம்
பிழைக்க தெரியாதவன் என்று.....

http://karuththuunn.blogspot.com/