செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ஜெனீவாவில் ஸ்ரீலங்கா: தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்?

சுதந்திரத்தின் பின்பு ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமூகத்திற்கும் அதன் கருத்தியல்வடிவமான ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைக்கும் புதிய விஷயம் அல்ல. ஸ்ரீலங்கா அரசின்மனித உரிமை மீறல்கள் தொடர்பான முதல் விவாதம் 1986 இல் ஐ. நா.சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடைபெற்றது. இதற்கான தீர்மானத்தை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவந்த நாடு ஆர்ஜென்டீனா. தீர்மானத்தை கொண்டு வருவதில் பின்னணியில் தீவிரமாக இயங்கிய நாடான இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. அப்போதைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் நண்பர்களாகவிருந்த அமெரிக்காவும்,மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவர்களுடைய சொல் கேட்ட பல ஆபிரிக்க நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. வன்னி இறுதி யுத்தத்தின் போது, சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பற்றிய சட்ட விதிகளும், மானிட நலன் தொடர்பான சட்ட விதிகளும் மீறப்பட்டனவா என்ற உண்மையை கண்டறிவதற்கான பகிரங்க விசாரணை தேவை என 2009 இல் மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு பதிலாக பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக ஸ்ரீலங்காவை பாராட்டும் தீர்மானம் உறுப்பு நாடுகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா,ரஷ்யாவுடன்,இந்தியாவும் முழுமனதுடன் பாடுபட்டது. இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு மனித உரிமை கவுன்சிலுக்கு ஸ்ரீலங்கா அளித்த வாக்குறுதிகள் முதன்மையான காரணமாக அமைந்தன. முப்பது வருடங்களுக்கு மேலாக அனுபவித்த பயங்கரவாதத்தின் கொடுமையை இப்போதுதான் முடிவுக்கு கொண்டு வந்ததாயும் உண்மையான ஜனநாயகமும், சுபீட்சமான பொருளாதாரமும் கட்டியெழுப்பப் படுவதற்கான கால அவகாசத்தை ஸ்ரீலங்காவுக்கு வழங்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா கோரியது சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஃபெப்ரவரி 27,2012 இல் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் 19வது அமர்வில்,சம்பவங்களுக்கான விளக்கம் அல்லது பதில் கூறும் தன்மை (accountability),விசாரணைகளில் நம்பகமான வெளிப்படைத்தன்மை  (transparency) என்பவற்றுடன் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை(reconciliation)மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசானது மேலும் பலன் தரக்கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம்கொண்டுவரப்படும் எனவும் அத்தகைய ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதற்கு தாம் ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீர்மானத்தை அமெரிக்கா தானாகவே பிரேரிக்குமா அல்லது கனடா,மற்றும் ஐரோப்பிய நேசநாடுகளினூடாகபிரேரிக்குமா என்பது ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் தற்போதைய பெரும் புதிராகும். போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பெருமளவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற எண்ணப்பாடு ஸ்ரீலங்காவில் இருப்பதாக தெரிவிக்கப் படுகிறது. தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்தை பெருமளவிலான பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தின் மத்தியில் முறியடித்தமைக்கு பொறுப்பான மனிதர்கள் தண்டிக்கப்படுவது ஒரு அவசியமான நியாயம் என அவர்கள் கருதுகிறார்கள். இத்தகைய விசாரணையொன்றை வலியுறுத்தி அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் எஞ்சியுள்ள பயங்கரவாததின் சதிவேலையாக பிரச்சாரம் செய்து சர்வதேச ரீதியான விவகாரம் ஒன்றை உள்ளூர் அரசியலாக மாற்றுவதில் ஸ்ரீலங்கா முனைப்பாக உள்ளதையும் அறியமுடிகிறது. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் போர்நிகழ்த்தப்பட வேண்டிய முறை பற்றி ஆலோசனை வடிவிலும், ஆயுதமற்றும் ராஜதந்திர உதவிகளை வழங்குவதற்கான முன் நிபந்தனைகளின் வடிவிலும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் போர்க்களத்தில் முற்று முழுதாகப் புறந்தள்ளப்பட்டதனமூலம் பெறப்பட்ட வெற்றியின் களிப்பில்,உரிமைகள் பற்றி வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் யாவும் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையை ஒரு நல்ல முன்னுதாரணமாக மற்றைய நாடுகளும் பின்பற்ற முனைந்தால் ஏற்படக்கூடிய சர்வதேச ஒழுங்கு முறையொன்றின் சீரழிவை மேற்கு நாடுகள் அனுமதிக்க தயாராக இல்லை என்ற நிலையே அந்நாடுகள் இத்தகைய தீர்மானமொன்றை வலியுறுத்துவதற்கான காரணம் எனவும்சொல்லப்படுகிறது. ஸ்ரீலங்கா அரசு வெளிநாட்டு தலையீடுகளை தவிர்ப்பதற்காக தானேநியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் குறைந்தபட்ச சிபாரிசுக்களைக் கூட நிறைவேற்றுவதில் ஆர்வம் காண்பிக்காததை பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்ரீலங்கா அரசு சர்வதேச அரங்குகளில் வெளிப்படுத்தும் காலம் கடத்தும் தன்மையை இனியும் பொறுமையுடன் சகித்துக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளடங்கியுள்ள அமைப்புக்களில் ஒன்றான மனித உரிமைகள் கவுன்சில் ஒரு வருடத்தில் இருஅமர்வுகளை மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்கிறது. மார்சில் நடைபெறும் அமர்வு ஜெனீவாவிலும்,ஜுலை அமர்வு நியூயோர்க்கிலும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கிடைக்கும்குற்றச்சாட்டுக்களை விசேட குழுவொன்றின் மூலம் விசாரித்து பின்னர் உறுப்பு நாடுகளின் தீர்மானத்திற்கு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப் படுகிறது. உறுப்பு நாடுகள் குறிப்பிட்ட ஒரு நாட்டில் ந டைபெறும் மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும்என ஏற்றுக்கொண்டால்,அத்தீர்மானம் ஐ. நா. பொதுச்சபையின் விவாததிற்கு சமர்பிக்கப்படும். பொதுச்சபையில் அநேகமாக உலகில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் அங்கத்தவர்களாக உள்ளன. பொதுச்சபையும் விவாதத்தின் முடிவில் அத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் அத்தீர்மானம ஐ. நா. வின் பாதுகாப்பு சபை என்ற அமைப்பின் விவாதத்திற்கு விடப்படும். இம்மூன்றுஅமைப்புக்களிலும் பாதுகாப்பு சபையே தனது தீர்மானங்களை செயலுருவமாக்கக் கூடிய அதிகாரத்தை கொண்டது. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானமே சர்வதேச குற்ற நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட முடியும். மனித உரிமை கவுன்சில் அல்லது ஐ.நா.பொதுச்சபை ஒரு நாட்டின் நடவடிக்கைகள் பற்றிய அபிப்பிராயங்களை தெரிவிக்கும்அமைப்புக்களே தவிரஒரு நாட்டின் நடவடிக்கைகளின் மீது எவ்வித கட்டுப்பாடுகளையும் பிரயோகிக்கும் சட்ட ஆளுமையற்றவை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் மீது பாதுகாப்பு சபைநிறைவேற்றிய தீர்மானங்கள் பலவற்றின் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்பட்டாமல் அவை கிடப்பிலேலேயே கிடக்கின்றன. அதேபோல்,சிரியாவில் நடைபெறும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கவுன்சிலும், பொதுச்சபையும் நிறைவேற்றிய தீர்மானம் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட முடியாமல் சீனாவும்,ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்தன. மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அடுத்த நாளே ஸ்ரீலங்கா அரசையும்,மஹிந்த ராஜபக்‌ஷவையும் குர்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடப் போவதில்லை. இத்தீர்மானம் நாட்டின் ஆட்சியாளரை சர்வதேச அரங்குகளில் வெட்கித் தலைகுனிய வைப்பதற்கான ஒரு கருவியாக அமையலாம். அதையும் விட உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம்,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற கடன் வழங்கும் அமைப்புக்களிலிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வது சிரமமான காரியமாக அமையலாம். தனிப்பட்ட நாடுகளும் கூட தமது பொருளாதார உதவிகளை நிறுத்திக் கொள்ளலாம். தன்னார்வ அமைப்புக்கள் ஸ்ரீலங்காவை பகிஷ்கரிக்குமாறு பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம். ஸ்ரீலங்காவிற்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டாம் எனவும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி பொருட்களை கடைகளில் வாங்க வேண்டாம் எனவும் அவை மக்களை கேட்டு பிரச்சாரம் செய்யலாம். மிக அண்மைக்காலம் வரை பர்மா மீது இத்தகைய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதிகாரத்தின் பெயரால் ஒரு உயிர் பறிக்கப்பட்டதற்கும், ஒரு நபர் காணாமல் போனதற்கும் காரணமாயமைந்தது எது அல்லது யார் என்ற வினாவிற்கு விடைசொல்ல வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. இறுதி யுத்ததின் முடிவில், தமது பிள்ளைகள் அல்லது உறவினர் இராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டதை நேரில் கண்டவர்கள் இன்றுவரை அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்ற கேள்விக்கு விடைதேடி காத்திருக்கிறார்கள்.அதேபோல்,ஒயாத அலைகளின் போது கைதிகளாகப் பிடிக்கபட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உண்டு. பிரிவும்,உயிரிழப்பும் தருகின்ற துயரத்திலிருந்து மீண்டெழுந்து,தமது வாழ்க்கையை முன்னோக்கி சீரமைத்துக் கொள்வதற்கான மனரீதியான மற்றும் பொருளியல்ரீதியான உதவிகளைவழங்குவது அரசாங்கத்தின் முக்கியமான கடமை. அதற்கும் ஒருபடி மேலே சென்று இனங்களுக்கிடையேயான சுமுக உறவையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசின் மிக முக்கிய பொறுப்பு. நாட்டு மக்கள் அனைவரினதும் சுமுகமான எதிர்காலத்தை மனதில் கொண்டு,ஐ.நா. தீர்மானம் தரக்கூடிய அழுத்தங்கள் எதிநோக்கப்பட வேண்டும். ஏற்கனவே கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்கள்,இத்தகைய பெருந்துயர் கொண்ட பேரழிவு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், சமூகங்களுக்கிடையேயான நட்பும் புரிந்துணர்வும் வளர்வதற்கான காரணியாகவும் அமைய வேண்டும். தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளைவிட மக்களின் எதிர்காலம் குறித்த அக்கறை முன்னிறுத்தப்பட வேண்டும். மனித உரிமை கவுன்சிலில் ஸ்ரீலங்கா மீதான தீர்மானம் ஒரு வேண்டுகோளாகத்தான் வெளிப்படுத்தப்படுகிறது. அத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அதை தமது மாபெரும் வெற்றியாக கொண்டாடுவதன் மூலம் நாட்டிலுள்ள தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் மீதான பாதுகாப்பு மேலும் குறைவடையச் செயவதோ அல்லது தோற்கடிக்கப்பட்டால், அந்த வெற்றி தரக்கூடிய மமதையில் ஸ்ரீலங்கா அரசு நாட்டிலுள்ள சிறுபானமை இனங்களின் நியாயமான உரிமைகளை வழங்க மறுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் தீர்மானம் இலங்கைத்தீவின் அனைத்து மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

புதன், நவம்பர் 16, 2011

மயூரன் சுகுமாரனும் மரண தண்டனையும்


பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம்,இருவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

பாலியில் கைது
2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தொனேசியாவின் பாலித் தீவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் எனப்படும் போதைப் பொருளை கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரில், (பின்னர் ஒட்டுமொத்தமாக பாலி 9 என அழைக்கப் பட்டார்கள்) இவ்விருவரும் முக்கியமானவர்களாக கருதப்பட்டு இருவருக்கும் இந்தொனேசிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. ஆறு வருடங்களாக இந்தொனேசிய உயர் நீதிமன்றம் வரை சென்று போராடியும், இந்தொனேசிய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப் பட்ட கருணை மனுவுக்கும் பலன் கிடைக்காத நிலையில், இவர்கள் இருவரும் பாலித்தீவின் மிக மோசமான சிறையொன்றில் மரண தண்டனையின் மூலம் தமது உயிர்கள் பறிக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.

மயூரன் மகிழ்ச்சியான பொழுதுகளில்  












இளமையின் சவால்
மயூரன் இலங்கை தமிழ் பெற்றோரான சுகுமாரன் - ராஜினி தம்பதிகளுக்கு மூத்த குழந்தையாக 1981 இல் இங்கிலாந்தில் பிறந்தார். 1984 இல் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே கல்வி கற்று வளர்ந்தவர். குங்-பூ போன்ற கொரிய தற்காப்பு கலையில் வல்லவரான மயூரன், சிட்னி நகரில் இளைஞர்களுக்கு அதை பயிற்சி அளித்தும் வந்தார். தவறான போதனைகளும். இளம் வயதிற்குரிய சவாலை எதிர் கொள்ளும் மனப்பாங்கும் தான் மயூரனையும் அவரது ஏனைய நண்பர்களையும் இவ்வாறானதொரு சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மயூரனது குடும்ப பின்னணியோ அல்லது வளர்ப்பு முறையோ அவரை இத்தகைய செயலில் ஈடுபடுத்தியிருக்க முடியாது. அவர் மீது இதுவரை அவுஸ்திரேலியாவில் ஒரு சிறிய குற்றம் கூடப் பதிவாகி இருக்கவில்லை. இன்று மரண தண்டனைக்கு காத்திருக்கும் மயூரன் பாலித் தீவில் கைது செய்யப்படும் போது அவருக்கு வயது 24 மட்டுமே.

அவுஸ்திரேலியாவின் கொள்கை
1973 இலிருந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் முறை அவுஸ்திரேலியாவின் சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டது. அத்துடன் மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை சர்வதேச மன்றங்களில் அவுஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளது. மரன தண்டனையை சர்வதேச ரீதியாக இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் 1990 இல் ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலியா, அத்தீர்மானத்தில் கையொப்பமிட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் தமது நீதி பரிபாலன முறையிலிருந்து மரண தண்டனையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திவந்துள்ளது.
1990 களில் போதைப் பொருட்களுடன் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரு அவுஸ்திரேலியர்களுக்கு மலேசிய நீதிமன்றம் விதித்த மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கும்படி, அந்நாளில் பிரதமராயிருந்த பாப் ஹாக் (Bob Hawke) மலேசிய அரசாங்கத்தை மிக உருக்கமாக வேண்டினார். அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு, பின்பு அவர்கள் தூக்கிலிடப்பட்ட செயலை “காட்டுமிராண்டித்தனம்” என அவர் வர்ணித்து மலேசியரின் கோபத்துக்கு ஆளானார்.

2005 இல், சிங்கப்பூரில் போதைபொருட்களுடன் கைது செய்யப் பட்ட வான் ருவோங் ங்குயென் ( Van Tuong Nguyen ) என்ற அவுஸ்திரேலியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை  விதித்தது. அவரை மன்னிக்குபடி அவுஸ்திரேலிய பாராளுமன்றம் நிறைவேற்றிய வேண்டுகோள் தீர்மானத்தையும் புறக்கணித்து சிங்கப்பூர் அரசாங்கம் அவரை தூக்கிலிட்டது. அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமராயிருந்த ஜோன் ஹவர்ட் (John Howard) ஐந்து தடவைக்கு மேலாக சிங்கப்பூர் பிரதமருக்கு தனிப்பட்ட முறையிலான மன்னிப்பு வேண்டுகோளை விடுத்திருந்தார். இந்த பின்னணியிலேதான் மயூரன் சுகுமாரன் உட்பட்ட 9 அவுஸ்திரேலிய பிரஜைகள் போதை பொருட்களை கடத்த முயன்ற குற்றச் சாட்டில் பாலியில் கைது செய்யப்பட்டனர். இந்தொனேசிய பொலிசாருக்கு அவுஸ்திரேலிய மத்திய பொலிசார் (Australian Federal Police)  கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் தமது பிரஜையை மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுத்த அதே வேளையில், இந்தொனேசியாவில் மரண தண்டனைக்கு உள்ளாவார்கள் எனத் தெரிந்திருந்தும் அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்களை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தது.
தாயார் ராஜினியும் தங்கை பிருந்தாவும்
மயூரனின் தங்கையான பிருந்தா சுகுமாரன் அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்த பேட்டியில், “இதனால் இவர்கள் எதை சாதித்து விட்டார்கள்? அவர்களுடைய குற்றத்தை ஏன் அவுஸ்திரேலியாவில் விசாரித்து தண்டனை வழங்கியிருக்கக் கூடாது? தமது குடிமக்கள் தூக்கிலிடப் படுவார்கள் எனத் தெரிந்திருந்தும்கூட ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்கள்?” என் வினவினார்.

போதைப் பொருட்கள்
1970 களில் வியட்நாமிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளைகளில், பல ஆசிய நாடுகளுக்கூடாக போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்தது. இதனைக் கட்டுபடுத்தும் நோக்குடன் மலேசியா, தாய்லாந்து, இந்தொனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனையை 1975 இல் அறிவித்தன. இத்தண்டனை முறை உடனடியாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும், பின்னர் வட ஆபிரிக்க நாடுகளுக்கும் (ஐரோப்பாவுக்கு மிக அண்மையில் இருப்பதால்) பரவியது. எனினும் இன்றைய நிலையில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆசிய நாடுகள் மரண தண்டனையை தமது சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றி விட்டன. பிலிப்பீன்ஸ் மிக அண்மையாக – ஜூன் 2006 இல்- மரண தண்டனையை இல்லாதொழித்ததால், 1200 வரையான மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த கைதிகள் உயிர் தப்பினார்கள். உலகிலேயே இன்று அதிகமான மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளாக சீனா, ஈரான், அமெரிக்கா, வியட்நாம், சூடான் என்பன விளங்குகின்றன. உலகின் ஏனைய நாடுகளில் தூக்கிலிடப் படுவோரின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமானோர் சீனாவில் மட்டும் தூக்கிலிடப் படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  போதைப் பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக கருதப்படும்  லத்தின் அமெரிக்காவின் பல நாடுகள் இன்று மரண தண்டனையை முற்றாக ஒழித்து விட்டன.

சர்வதேச நிலைப்பாடு
மார்ச் 2007 இல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சங்கத்தின் (UN Human Rights Council) மூன்று வார மாநாட்டில், வன்முறை சம்பந்தப்படாத குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது கண்டிப்பாக தவிர்க்கப் படவேண்டும் என்ற வாதத்தை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் வலியுறுத்தி பிலிப் ஆல்ஸ்ரன் (Philip Alston) முன் வைத்தார். நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராக இருந்த ஆல்ஸ்ரன், நீதிக்கு புறம்பான, மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான மரணதண்டனைகளை கண்டறிவதற்கான ஐ.நா.சபையின் விசேட தூதுவராகவும் பணியாற்றினார். ( UN Special Rapporteur on Extrajudicial, Summary or Arbitrary Executions). போதைப் பொருள் கடத்தல் போன்ற பொருளாதார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து வாதிடுவதற்கான நல்ல சந்தர்ப்பம் அம்மாநாட்டில் அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்திருந்தும் கூட, ஐ.நா.வுக்கான அவுஸ்திரேலிய பிரதிநிதி மரண தண்டனைக்கான தமது எதிர்ப்பை தெரிவிப்பதிலிருந்து விலகியே இருந்தார் என்றார் அவர். அதே காலப்பகுதியில் பதினொரு அவுஸ்திரேலிய பிரஜைகள் மரண தண்டனையை எதிர்நோக்கி வெளிநாட்டு சிறைகளில் காத்திருந்தனர்.

மரண தண்டனை நீதியானதா?
மரண தண்டனை என்ற பெயரில், ஒரு மனிதனின் உயிரை அரசு பறிப்பதற்கான அதிகாரம் மிகவும் கொடூரமானது என சமூக ஆர்வலர்களும் சிந்தனையாளர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு மனிதன் தவறிழைப்பதற்காகவே பிறப்பதில்லை எனவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவன் தவறிழைத்து விட்டால், அத்தவறை நினைத்து வருந்தி அவன் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை சமூகம் அவனுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வாதிடுகிறார்கள். “காட்டுமிராண்டித் தனமான ஒரு குற்றச்செயலை செய்த ஒருவரை தூக்கில் போடுவதன் மூலம், நாமும் பழிக்குப் பழி என்னும் காட்டுமிராண்டித் தனமான நிலக்கு தாழ்ந்து விடுகிறோம்” என்கிறார் அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஆண்ட்றூ பாட்லெட். (Andrew Bartlett). அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர், மனநிலை பிறழ்ந்தோர், நீதிமன்றத்தில் தம்மை சரியான முறையில் காப்பாற்றிக் கொள்ள பண வசதியற்ற ஏழைகள் என்போரே அதிகளவில் தூக்கு தண்டனைக்கு உள்ளாகிறார்கள். ஈரானில் பராயமடையாத சிறுவர், சிறுமியரும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கல்லெறிந்து கொலை செய்யபடுகிறார்கள். அண்மையில் 16 வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளம் பெண், கற்பு நெறிக்கான ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்கத் தவறியதால் கல்லெறிந்து கொல்லப்படும் மரண தண்டனைக்குள்ளானாள். 


இங்கிலாந்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு,1953இல் பெருந்தொகையான மக்களது எதிர்ப்பின் மத்தியில் டெரெக் பெண்ட்லி (Derek Bentley) தூக்கில் தொங்க விடப்பட்டபோது அவருக்கு 19 வயது. அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவறானது என்றும் ஆனால், குற்றச் செயலில் அவர் பங்கெடுத்தமைக்காக அவருக்கு பகுதி மன்னிப்பு (இறந்த பின்பு) வழங்குவதாயும்1993 இல் (சரியாக 40 வருடங்களின் பின்) அப்போதைய உள்துறை அமைச்சர் அறிவித்தார். 1998இல் அப்பீல் நீதிமன்றம் பெண்ட்லி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கி அவர் மீதிருந்த களங்கத்தை நீக்கியது. தவறான நீதி வழங்கலால் பறிக்கப்பட்ட ஒரு உயிரை மீண்டும் கொண்டுவர முடியுமா? பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சரான மைக்கல் ஹவர்ட் (Michael Howard) பின்வருமாறு கூறுகிறார்: “நீதி விசாரணையென்பது தவறுகளின்றி, முற்று முழுதாக சரியானது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. அத்தகைய விசாரணையின் அடிப்படையில், அரசு ஒரு மனிதனின் உயிரை பறிப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை”. ஹவர்ட் ஒரு தலை சிறந்த சட்ட வல்லுனரும் கூட. மரண தண்டனைக் கைதியாக இருந்த வால்மீகி முனிவர் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரே இராமயணத்தை எழுதினார் எனவும், அவர் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்தால் இன்றுவரை இறை வணக்கத்திற்குரியவராக உள்ள இராமபிரானின் கதை எமக்கு தெரிய வந்திருக்க முடியுமா என வினவுவோர் உண்டு. ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனை அழித்துவிடுவதன் மூலம், அவனிடமிருக்கக் கூடிய அனைத்து ஆளுமைகளையும் அழித்துவிடுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது அவர்களுடைய வாதம். காலத்திற்கொவ்வாத, மனிதத்தன்மை சிறிதுமற்ற இத்தகைய தண்டனை முறையை வரலாற்றின் குப்பை தொட்டிக்குள் வீசியெறிய வேண்டும் என லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தது.

முன்னுதாரணம்

ஓவியம் தீட்டும் மயூரன்
மயூரன் சிறைக்குள்ளே ஒரு முன்னுதாரணமான மனிதராக விளங்குகிறார் எனவும், அவர் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டார் என தாம் முழு மனதுடன்
நம்புவதாகவும், அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் எனவும் பாலியின் கெரபொக்கான் சிறைச்சாலையின் பிரதம பொறுப்பதிகாரி இந்தொனேசிய உயர் நீதிமன்றத்தில் வேண்டினார். ஆறு வருடங்களாக மிக மோசமான சுகாதார நிலைமைகள் உள்ளதாக கருதப்படும் பாலி சிறையில் அடைபட்டுள்ள மயூரன், சிறைச்சாலைக்குள் ஒரு குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கைதிகளின் நலன்களை கவனிப்பது, சிறு திருத்த வேலைகளை கவனிப்பது என்பவற்றுடன், சக கைதிகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுப்பதுடன் தானும் ஓவியம் தீட்டுகிறார். பாலியின் தலைநகரத்தில் ஒரு ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து சிறைக்குள் வரையப்பட்ட ஓவியங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தில், போதைப் பொருள் பாவனையிலிருந்து மீள விரும்புவர்களுக்கான உதவி நிலையம் ஒன்றை பாலியில் இயங்கச் செய்கிறார்வாழ்க்கையின் நோக்கங்கள் எவை என்று புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தமைக்காக நான் கவலைப் படுகிறேன்; சிறை எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்து விட்டது, என்கிறார் மயூரன். எனது தவறுக்காக நான் இந்தோனேசிய மக்களிடமும் அவுஸ்திரேலிய மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்”. 

“அவரை தூக்கிலிடுவதன் மூலம் அவர் மட்டும் இறக்கப் போவதில்லை” என்கிறார் மயூரனின் தங்கை பிருந்தா சுகுமாரன். “அப்பா, அம்மா, நான், தம்பி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் ஒரு நிரந்தரமான இழப்புடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். அந்த இழப்பிலிருந்து எங்களால் என்றும் மீள முடியாது”. 
  
“எனது மகனுக்கு திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்து இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்” என்று மன்றாட்டமாக வேண்டுகிறார் மயூரனின் அம்மா ராஜினி.

Myuran Sukumaran from Mercy Campaign on Vimeo.

(இருபது வருடங்களுக்கு முன்னதாகவே தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்தை என்னுள் விதைத்த ஆசானும், நண்பருமான தோழர் எஸ். வி. ராஜதுரை அவர்களின் நினைவுகளுக்கு ....)

(இக்கட்டுரையின் ஆக்கத்தில் உரிய ஆலோசனை தந்து பங்கெடுத்த எனது விரிவுரையாளர் திரு. மு. நித்தியானந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி).